Thursday, 17 January 2013

தொல்காப்பியத்தில் சொல் நிகழ்வெண் ஆய்வு

  தொல்காப்பியத்தில் சொல் நிகழ்வெண் ஆய்வு


 

 
முன்னுரை
மொழியின் அமைப்பை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். 1. அதன் இலக்கணம் (Grammar) 2. அதன் சொற்கோவை (Vocabulary). மொழியின் இலக்கணம், மொழியின் அலகுகளான ஒலி(sound), ஒலியன்(phoneme), உருபன்(morpheme), சொல்(word), சொற்றொடர்(sentence) ஆகியவை அமைந்து வழங்கும் படிச்சட்டங்களை(patterns) விளக்குவதாகும். அப்படிச்சட்டங்களுக்கு உயிரூட்டுவன அவற்றை நிரப்பும் பொருளுள்ள சொற்களும் உருபன்களுமே. எனவே ஒரு மொழியை நன்கு புரிந்துகொள்ளச் சொற்களையும் அவற்றின் பொருளையும் நன்கு விளங்கிக் கொள்ளவேண்டும்.
சொற்கோவையை ஆய்வன மொழியியலில் இரண்டு துறைகள், ஒன்று சொல்லியல் (Lexicology). இது சொல்லை மொழி என்னும் முற்றமைப்பின் துணையமைப்பாகக் கொண்டு ஆராய்வது. இத்துறை மொழியியல் வல்லுநருக்கு மட்டுமே பயன்படுவது. மற்றொன்று அகராதியியல் (Lexcicography) இது பயன்பாட்டு மொழியியல் (Applied Linguistics) பிரிவு ஆகும். இது மொழியைப் பயன்படுத்தும் சாதாரண மக்களுக்கு உதவி செய்யும் வகையில் சொற்கோவையின் பல கூறுகளையும் தொகுத்துக் கூறும் இயலாகும். இவ்வியல் அகராதித் தொகுப்பிற்குரிய அடிப்படைக் கொள்கைகளையும் அகராதி தொகுக்கும் நெறிமுறைகளையும் விளக்கும். அகராதி தொகுக்கப்படுவதற்கு அடிப்படையாய் அமையும் காரணிகள் மூலம் அவை வகைப்படுத்தப்படும். இங்கு அகராதித் தொகுப்பு வகையைப் பற்றிப் பேசவில்லை. இக்கட்டுரை ஒரு நூலில் இடம்பெற்றுள்ள சொற்களின் நிகழ்நிலையை ஆராய்கிறது.
1.    சொற்பகுப்பு நெறிமுறை

தரவு மூலங்கள் சொற்பிரிப்பு முறையின் மூலம் சேகரிக்கப்படுகின்றன. சொற்பிரிப்பு முறைகள் மூன்று வகைப்படும் (Sugusta 1971:231). அவை 1. முற்றுச் சொற்பிரிப்பு (Total excerption) 2. பகுதிச் சொற்பிரிப்பு (Partial excerption) 3. சிறப்புச் சொற்பிரிப்பு (Special excerption) எனப்படும். 1. முற்றுச் சொற்பிரிப்பு என்பது ஒரு நூலில் உள்ள அனைத்துச் சொற்களையும் தரவாக எடுப்பது. 2. பகுதிச் சொற்பிரிப்பு என்பது ஒரு நூலின் ஒரு பகுதி அல்லது குறிப்பிட்ட ஆசிரியர் எனப் பிரித்து தரவாக எடுப்பது. 3. சிறப்புச் சொற்பிரிப்பு என்பது ஒரு நூலில் உள்ள சொற்களைப் பொருண்மை அடிப்படையில் பிரித்து எடுப்பது. இங்கே தொகுக்கப்படும் சொற்பிரிப்பு முறை முற்றுச் சொற்பிரிப்பு முறை ஆகும். இம்முறையே தரவு மூலங்களில் உள்ள அனைத்துச் சொற்களும் பிரிக்கப்பட்டுள்ளன. * இங்குக் கொடுக்கப்பட்டுள்ள சொற்பிரிப்பு நெறிமுறைகள் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் உருவாக்கப்பட்டது.

I.    சொற்பிரிப்பு முறை

1.    சொல்லடைவுக்கு அடிப்படையாக இலக்கணச் சொல்லை (Grammatical Word) முடிக்கும் விகுதியின் அடிப்படையில் (Wordclosing Morpheme) பிரிக்க வேண்டும்.
    பெயரின் ஒருமை வடிவம்        -    மரம், யானை

    பன்மை விகுதி பெற்ற வடிவம்    -    மரங்கள், யானைகள்

    பொதுப்பெயர்களின் ‘அத்து’,
    ‘வற்று’ச்சாரியை பெற்ற வடிவம்     -     மரத்து, குளத்து

    வேற்றுமை ஏற்கும் போது
    வல்லொற்று இரட்டிக்கும் வடிவம்  -    காட்டு, களிற்று

    பதிலிப்பெயர்களில் ‘அன்’
    சாரியை ஏற்கும் வடிவம்        -     அதன், இதன்

2.    பெயர்களில் முடியும் விகுதியைத் தொடர்ந்து வரும் வேற்றுமை உருபு, உம்மை, ஏ, ஆ, ஓ போன்ற இடைச்சொற்கள், இன் சாரியை ஆகியவற்றைப் பிரித்துத் தனிப்பதிவுகளாகத் தரப்பட வேண்டும்.

வேற்றுமை உருபு

1.    இரண்டாம் வேற்றுமை (-ஐ)
        எயிலை        -    எயில் + ஐ

2.    மூன்றாம் வேற்றுமை (-ஒடு)
         கொடியொடு        -    கொடி + ஒடு

3.    நான்காம் வேற்றுமை (கு, -க்கு, -அக்கு, -உக்கு)
        கரும்பிற்கு        -    கரும்பு +இன் +கு
        சாத்தற்கு        -    சாத்தன் +கு
        மதுரைக்கு        -    மதுரை + க்கு
மகட்கு        -    மகள்+கு
கட்கு            -    கண்+கு
        தமக்கு            -    தம் + அக்கு
        எமக்கு            -    எம் + அக்கு
        அவனுக்கு        -    அவன் + உக்கு
        அவளுக்கு        -    அவள் + உக்கு

4.    ஐந்தாம் வேற்றுமை (-இன்)
        காக்கையிற்கரிது    -    காக்கை+இன்+கரிது   
        இதனின் வட்டமிது    -    இதன்+இன்+வட்டம்+இது
        குரலின்        -    குரல்+இன்

5.    ஆறாம் வேற்றுமை (-அது)
        எள்ளது குப்பை    -    எள்+அது + குப்பை
        படையது குழாம்    -    படை+அது + குழாம்

6.    ஏழாம் வேற்றுமை (-கண்)
        பொருட்கண்        -    பொருள்+கண்
        மலர்க்கண்        -    மலர்+கண்
உம்மை

1.    எண்ணும்மை
        புள்ளியும்        -    புள்ளி+உம் (தொல்.2:4)
        உயிர்த்தலும்        -    உயிர்த்தல்+உம் (தொல்.33:1)

2.    முற்றும்மை
        ஏழும்            -    ஏழ் + உம் (தொல்.4:3)
        ஐந்தும்        -    ஐந்து + உம் (தொல்.3:3)


3.    சிறப்பும்மை
        இசையினும்        -    இசையின் + உம் (தொல்.10:1)
        கிளப்பினும்        -    கிளப்பின் + உம் (தொல்.372:2)


4.    எச்சவும்மை
        இயற்கையும்        -    இயற்கை + உம் (தொல்.16:1)
        குறுகலும்        -    குறுகல் + உம் (தொல்.35:1)

5.    அசை
        மிசையொடும்    -    மிசை + ஒடு + உம் (தொல்.129:2)
        மரபே தானும்    -     மரபு+ஏ +தான் + உம்(தொல்.594:2)

6.    எதிர்மறை
        உறழினும்        -    உறழின் + உம் (தொல்.146:2)
        வரினும்        -    வரின் + உம்    (தொல்.200:3)

7.    சாரியை
        நிகரலும்        -    நிகரல் + உம் (தொல்.481:3)

8.    உம் என்னும் ஈறு       
உம்மை எண்ணும்    -    உம்மை எண் + உம்    (தொல். 772:1)
9.    இழிவு               
            அவனும் வந்தான்    -    அவன் + உம் வந்தான் (பொருள்
                            அடிப்படையில்)
10.     பிற (உம்)
    எகர ஒகரத்து இயற்கையும் அற்றே    (தொல்.16:1)

* பெயரெச்சம், வினைமுற்றில் வருகின்ற ‘உம்’ -ஐ பிரிக்கக் கூடாது.
        இறூஉம்         உட்கும்
        உணர்த்தும்        ஒக்கும்

3.    சொல்லுருபுகள் பிரிக்கப்பட வேண்டும். (மேல், கீழ், முன், பின்…)
மேசையின் மேல்     மேசை+ இன்+மேல்
கடலின் கீழ்         கடல்+இன்+கீழ்

4.    பெயரெச்சத்திற்குப் பின் வரும் வினைப்பின்னுருபுகள் பிரிக்கப்பட வேண்டும். (தொறும், தோறும், கால், பின், பிறகு …)
பயில்தொறும்     பயில்+தொறும்
நினைத்தொறும்    நினை+தொறும்
ஒலித்தக்கால்     ஒலித்த+கால்
வாராக்கால்        வாரா+கால்
வந்தபின்         வந்த+பின்
சென்றபிறகு         சென்ற+பிறகு

5.    வினைச்சொற்களில் வினைமுற்று, வினையெச்சம், பெயரெச்சம், தொழிற்பெயர், வினையாலணையும் பெயர், நிபந்தனை வினையெச்சம் ஆகியவை பிரிக்கப்படக் கூடாது. ஆனால் இவ்வினை வடிவங்களைத் தொடர்ந்து வரும் இடைச்சொற்களைப் பிரித்துத்தர வேண்டும்.

    வருவார் கொல்    -    வருவார் + கொல்
    வந்தன்றே        -    வந்தன்று + ஏ
    வருவானா        -    வருவான் + ஆ

6.    வினையெச்சத்தை அடுத்து உருபுகள் வரும்பொழுது அவற்றைப் பிரித்துத் தரவேண்டும்.
உண்டாங்கு        -    உண்டு ஆங்கு
பட்டாங்கு        -    பட்டு ஆங்கு

7.    வினைத்தொகைகளில் வரும் வினையடிகள் பிரிக்கப்பட வேண்டும்.  ஆனால் வினைத்தொகைகள் மரபுச்சேர்க்கையாக / மரபுத்தொடராக வரும்பொழுது அவற்றைச் சேர்த்துத்தர வேண்டும்.


வினைத்தொகை                   
        கொல்யானை     -    கொல் + யானை       
        விரிகதிர்         -    விரி + கதிர்           

மரபுச்சேர்க்கை
        ஊறுகாய்
        கலிமா

8.    அன்மொழித்தொகையைப் பிரிக்க வேண்டாம்
பொற்றொடி  ‘பெண்’
ஏந்திழை    ‘பெண்’
மெல்லியல்    ‘பெண்’
ஆயிழை    ‘பெண்’
விளங்கிழை    ‘பெண்’

9.    உரிச்சொற்களைப் பிரித்துத்தர வேண்டும்.
சாலப்பேசினான்    சால+ பேசினான்
உறுபுகழ்        உறு+ புகழ்
தவஉயர்ந்தன    தவ+ உயர்ந்தன
நனிதின்றான்        நனி+ தின்றான்

10.    பண்புத்தொகையினைப் பிரிக்கலாம். பண்படியின் மாற்று வடிவங்களைப் பிரித்து அதன் அடிப்படை வடிவத்துடன் தொடர்புபடுத்திக்காட்ட வேண்டும்.
செந்நிலம்        -    செம் + நிலம்
சேவடி            -    சே + அடி
பசும்பொன்        -    பசும் + பொன்
பைம்பொன்        -    பைம் + பொன்
பாசடை        -    பாசு + அடை


11.சுட்டுப்பெயரடைகள், அவற்றின் மாற்று வடிவங்கள் பிரிக்கப்பட வேண்டும்.
அவ்விடம்         -    அ + இடம்
அந்நாள்        -    அ + நாள்
ஆயிரு            -    ஆ + இரு
ஆயிடை        -    ஆ + இடை

12.    உவமைத்தொகை/உவமஉருபு ஆகியவற்றைப் பிரிக்க வேண்டும்.

உவமைத்தொகை


        மதிமுகம்        -    மதி + முகம்
        பவளவாய்        -    பவளம் + வாய்
        முத்துப்பல்        -    முத்து + பல்

உவம உருபு


        முகத்தன்ன        -    முகத்து + அன்ன
        தேன்போல        -    தேன் + போல
       

13.     எண்ணுப்பெயர்களில் ஈரைந்து, மூவைந்து ஆகியவற்றில் அடையாக வரும் ஈர், மூ ஆகியவற்றைப் பிரிக்க வேண்டும். ஆனால் ஈராயிரம், மூவாயிரம், ஆறாயிரம் போன்ற எண்ணுப்பெயர்களைச் சேர்த்துத்தர வேண்டும்.

14.    அளபெடுத்துவரும் சொற்களை அவ்வாறே தருதல் வேண்டும்.
குரூஉ கெடிற்ற
பரூஉ கண்

15.    வண்ணச் சினைச் சொற்களைப் பிரித்தத் தரவேண்டும்
செங்கால்நாரை         -    செம்+கால்+நாரை
பசும்பூண்பாண்டியன்    -    பசும்+பூண்+பாண்டியன்

2.    தொல்காப்பியம்
தொல்காப்பியத்தில் மொத்த நூற்பா எண் குறித்து கருத்துவேறுபாடு நிகழ்கிறது. உரையாசிரியர்களிடையே 1602, 1610, 1612, 1614 என்று கழகப்பதிப்பிலும் பிற பதிப்புகளிலும் காணப்படுகின்றது. இக்கட்டுரைக்கு எடுத்துக்கொண்ட நூல் 1996 –இல் வெளிவந்த தொல்காப்பியம் -வேங்கடராமையா, கே. எம்.,  ச. வே. சுப்பிரமணியன், ப. வெ. நாகராசன் (பதி). திருவனந்தபுரம்: பன்னாட்டுத் திராவிட மொழியியற் கழகம். இப்பதிப்பில் 1614 நூற்பாக்கள், 4037 வரிகள், 25818 மொத்தச் சொற்கள், 3675 தனிச்சொற்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளன.

3.    சொற்களின் நிகழ்வெண் ஆய்வு  (Frequency Analysis of word)
திருவனந்தபுரம் பதிப்பை அடிப்படையாகக் கொண்டு, மிகுந்த நிகழ்வெண், குறைந்த நிகழ்வெண் என்ற பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. அவற்றில் பின்வரும் சொற்கள் இடம்பெற்றுள்ளன.





4.    ஒட்டுகளின் நிகழ்வெண் ஆய்வு (Frequency Analysis of Suffixes)

திருவனந்தபுரம் பதிப்பை அடிப்படையாகக் கொண்டு, மிகுந்த நிகழ்வெண், குறைந்த நிகழ்வெண் என்ற பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. அவற்றில் பின்வரும்ஒட்டுகள்இடம்பெற்றுள்ளன.
   



5.    சொற்களின் இலக்கண ஆய்வு (Grammatical Analysis)

திருவனந்தபுரம் பதிப்பை அடிப்படையாகக் கொண்டு, சொற்கள் கீழ்க்கண்ட வகைகளாக (Categories) பிரிக்கப்பட்டுள்ளன. இது இலக்கணக் குறியீட்டு (Grammatical Tagging) உருவாக்குவதற்கும் குறியீட்டுத் தரவகத்தை (Tagged Corpus) உருவாக்குவதற்கும்  அடிப்படையாக அமையும்.


5.1    இடைச்சொல்  (Particle)
ஈன்  - அசை     
கொல் - அசை 
சின்  - அசை 
மன்  - அசை 

5.2 ஏதுக்கிளவி (Causative excerption)
அல்லதை - அல்லது
ஆகலான் - ஆகையால்
ஆதலின் - ஆகையால்
ஆகலின்- ஆகையால்
என்பதனால் – (என்று) சொல்லப்படுவதால்

5.3  எண்ணுப்பெயர் (Numerical Noun)
ஆயிரம்
நூறாயிரம்
5.4  எண்ணுப்பெயரடை அடி (Numerical Adjectival
Base)
ஒரு
பன்னிரு

5.5  குறிப்பு வினைமுற்று(Tenseless Verb)
இடத்த   - இடத்திற்குரியன
இயல்பின   – இயல்பினை உடைய
இயற்கைத்து   – இயல்பினை உடைத்து
இலள்   - இல்லாதவள்
ஈற்ற   – ஈறாக உடையன

5.6  குறிப்புப் பெயரெச்சம் (Adjectival Participle)
அல்லா 
இல்லா 
துணைய 

5.7 குறிப்பு வினையடி/பெயரடி (Adjectival Base)
இரும் 
ஒண் 
ஒள் 
குறும் 

5.8  குறிப்பு வினையெச்சம் (Verbal Participle)
அன்றி 
இன்றி 
இனிது

5.9  குறைச்சொல் /ஒட்டு(Clitic)
-உம் 
-ஏ 
-ஓ 
-தாம் 
-தான் 



5.10  சாரியை (Link Morph)
  -அன் 
  -அம்
  -இன்
     
5. 11  சுட்டுப்பெயர் (Demonstrative Pronoun)
அது 
இது 
அவை 
இவை 

5.12  உவம உருபுகள்/எதிர்வு எச்சம்  (Comparisonwords)
உறழ   
ஒப்ப 
காய்ப்ப 

5. 13  தொழிற்பெயர் (Verbal Noun)
அகறல் – விட்டு நீங்குதல்
அஞ்சல் – அச்சம் கொள்ளல்
அடல் – போரிடல்
அரற்றல் – புலம்புதல்
அல்கல் – தங்குதல்

5.14  நிபந்தனையெச்சம் (Conditional verbalParticiple)
அயர்ப்பின் - மறப்பின்
அழியின் – வருந்தின்
அழுங்கின் – இரங்கினால்
இயலின் - நடந்தால்

5.15  பின்னுருபு/சொல்லுருபு (Postposition)
இடை – நடுவிடம்
இம்பர் - பின்   
ஒழிய – தவிர
5.16  பெயர்ச்சொல்  (Noun)
அசை – செய்யுள் உறுப்பு
அருர் - வருத்தம்
அடிசில் - உணவு

5. 17  பெயரெச்சம் (Relative Participle)
அளவிய - உசாவிய
அறிந்த - தெரிந்த
அறியா - தெரியாத
அறியும் - குறிக்கும்
ஆக்கிய - செய்த

5. 18  முற்றெச்சம் (Finite Participle)
கண்ணினர்   - கருதினராய்/கருதி
செய்தனர்   - செய்தனராய்/செய்து
தங்கா   - தங்காதவராய்/தங்காது
தந்தனர்   – கொண்டு வந்தனராய்/வந்து
துணித்தனர்   – பிரித்தனராய்/பிரிந்து



5. 19  வினாப்பெயர் (Interrogative Pronoun)

 யாது 

5. 20  வினைமுற்று (Finite Verb)
அடங்கும்   - உட்படும்
அமையா   - பொருந்தா
அமையும்   - பொருந்தும்
அருகும்   – சிறுபான்மையாய் வரும்

5. 21  வினையடை (Adverb)
அங்கு 
ஒருங்கு 
செவ்விதின் 
திண்ணிதின் 

5. 22  வினையாலணையும் பெயர் (Participial
Noun)
அகன்றோர்   - சென்றவர்
அணிந்தவை   - அணியப்பட்டவை
அமைந்தவை   - தெரிந்தவை
அமைப்பது   - முடிக்கப்படுவது
அழிந்தது   – மனம் வருந்தியது

5. 23  வினையெச்சம் (Adjectival Verbal Base)
அஃகி – அருகி
அகன்று – பிரிந்து
அங்காந்து – வாய்திறந்து
அடக்கி - உட்கொண்டு
அமர்ந்து – விரும்பி

5. 24  வேற்றுமையுருபு (Case Marker)
-ஐ, -ஆல், -கு , க்கு, -அக்கு, -உக்கு, இன், -இல்,
-அது




6.    உறழ் வழக்கு (Free variation)

இடம்  (9) - இடன்  (28)
இரவு  (6) - இரா  (1)
இழிபு  (3) - இழிவு  (1)
உடம்பு  (3) - உடல்  (1)
உலகம்  (7) - உலகு  (2)
எல்லா  (32) - எல்லாம்  (48)

7.    ஒட்டுகளின் மாற்றுருபுகள் (Allo morpheme of Suffixes)
ஒடு  (317) - ஓடு  (33)
கு  (109) - க்கு  (170)

8.    சொல் நிகழ் நிலை (Key Word in Context)
ஒரு தரவகத்தில் உள்ள சொற்கள், ஒட்டுகள் ஆகியவை வரும் இடங்களையும் அதன் நிகழ்வெண்களையும் காணமுடியும். மேலும் சொல் வடிவங்களையும் அதன் இலக்கணத்தையும் அறியமுடியும்.








9.    துறைச்சொற்கள் (domain words)
சொற்களைத் துறை அடிப்படையிலும் பொருள் அடிப்படையிலும் தொகுக்க வேண்டும். அவற்றுள் ஒரு பொருட் பன்மொழி, பல பொருள் ஒருமொழிச் சொற்களைத் தொகுத்து ஆராய வேண்டும்.
1.    உறவுமுறையில் தாய்
செவிலி  (8), தாய்  (14), தாயர்  (2), நற்றாய்  (2)

2.    உறவுமுறையில் தந்தை
     தந்தை  (3), தந்தையர்  (1)

3.    விலங்குகளில் ஆண் (ஒரு பொருட் பன்மொழி)
ஏற்றை  (2), ஏறு  (3), ஒருத்தல்  (2), கடுவன்  (2), கண்டி  (2), களிறு  (4)

4.    கிளவி சொல்லின் பல பொருள் (பல பொருள் ஒருமொழி)
கிளவி – சொல், கூற்று, உருபு, எழுத்து, சொற்றொடர், பொருண்மை,

10.    மரபுச் சொற்சேர்க்கை (set combination)
இச்சொற்களின் சேர்க்கை,சொல்லமைப்பையும் பொருள் அமைப்பையும் ஆராயப் பயன்படும்.
நண்பகல்  (1) – பகற்பொழுதின் நடுப்பகுதி
நல்குரவு  (1) - வறுமை
நாள்கோள்  (1)  புறப்பொருள் துறை
பின்னிலை  (3) வழிபடுதல்

11.    கலைச்சொற்கள் (Technical words)
நூலில் இடம்பெற்றுள்ள கலைச்சொற்களும் அவற்றின் நிகழ்வெண்ணையும் ஆராய்தல். பல்வேறு அகராதி உருவாக்கத்திற்குப் பயன்படும்.
அஃறிணை  (21)
அகத்திணை  (2)
அளபெடை  (15)
ஆற்றுப்படை  (1)
12.    வட்டார வழக்கு வேறுபாடுகள் (Dialectal Variation)
தொல்காப்பியத் தரவு அக்காலத்து தகு வழக்காகக் கருதப்பட்ட செந்தமிழ் நிலத்தும் செந்தமிழ் சார்ந்த பன்னிரு நிலத்தும் அவற்றில் பேசப்பட்ட வட்டார வழக்குச் சொற்களும் சேர்ந்தது (க. பாலசுப்பிரமணியன், 2007).
கல்தீது, கற்றீது, கஃறீது (தொல். எழுத்து. 369, 370)
பீர்ங்கோடு, பீரங்கோடு (தொல். எழுத்து. 364, 366)
தேன்குடம், தேற்குடம், தேக்குடம் தேங்குடம் (தொல். எழுத்து. 341) (தேன், தேம்)

சங்க இலக்கியத்தில் தேன் (60), தேம் (81) இடங்களிலும் இடம்பெற்றுள்ளன.

13.    பாடவேறுபாடுகள் (Variation in Reading)
ஒரு நூலில் பாடம், பாடவேறுபாடுகளைத் தொகுத்து, மொழியமைப்பின் அடிப்படையில், எது பாடம், எது பாடவேறுபாடு எனக் காண மேற்கூறிய நிகழ்வெண் ஆய்வு பயன்தரும்.
அசைக்கும்  (1) – இசைக்கும் (பா.வே.)
அசைச்சீர்த்து (1) – அசைச்சீர் (பா.வே.)
அடக்காது  (1)   - அடங்காது  (பா.வே.)
அமிழ்தம்  (1)  – அமுதம் (பா.வே.)
அவையகத்து  (1)  – அவையத்து (பா.வே.)

முடிவுரை
இக்கட்டுரை வழிச் சொற்கள், சொற்களின் பயன்பாட்டு இன்றியமையாமையை அறியமுடிகிறது. இது இயற்கை மொழி ஆய்வுக்கு அடிப்படையாக அமைகிறது. பயன்பாட்டு மொழியியலான மொழிகற்றல், கற்பித்தல், அகராதி உருவாக்கம், இயந்திர மொழிபெயர்ப்பு, மேலும் மொழிக் கருவிகள் உருவாக்கத்திற்குப் பயன்படுகின்ற உருபனியல் பகுப்பி, உருவாக்கி, சொற்றொடர் பகுப்பி, சொற்சூழல் கருவி, இலக்கணக் குறிப்பான் எனப் பல் வேறு நிலைகளில் பயன்படுகிறது. ஒரு மொழியின் பொது விதி, சிறப்பு விதி எது என இனம் கண்டு அதற்கேற்ப விதி அமைத்துகொள்வதற்கு இவ் ஆய்வு பயன்படும். இச்சொற்களின் பயன்பாட்டு மூலம் வரலாறு, பண்பாடு, கலை, இலக்கிய ஆய்வுகள் சிறக்கும்.


மேற்கோள் நூல்கள்

  1. நாகராசன் ப. வெ., விஷ்ணுகுமரன் (தொகு.). 2000. தொல்காப்பியச் சிறப்பகராதி, திருவனந்தபுரம்:பன்னாட்டுத் திராவிட மொழியியற் கழகம்.
  2. பாலசுப்பிரமணியன் , க. 2007. ‘தொல்காப்பிய ஆய்வின் அணுகுமுறை’ நோக்கு ப. 23-35. சென்னை:பன்னாட்டுக் காலாண்டிதழ்.
  3. மாதையன் , பெ. 2007. சங்க இலக்கியச் சொல்லடைவு. தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக் கழகம்.
  4. வேங்கடராமையா, கே. எம்.,  ச. வே. சுப்பிரமணியன், ப. வெ. நாகராசன் (பதி.). 1996. தொல்காப்பியமூலம் (பாட வேறுபாடு ஆழ்நோக்கய்வு),  திருவனந்தபுரம்: பன்னாட்டுத் திராவிட மொழியியற் கழகம்.   
  5. Balasubramanian, K. 1981. A Descriptive Grammar of Tolkappiyam (An unpublished thesis).Annamalainagar: Annamalai Uinversity.
  6. Balasubramanian, K. 1986. ‘Indices and Concordances’ patiṉeṭṭāvatu karuttaraṅku āyvukkōvai.Annamalainagar: All India Teacher  Associations.  
  7. Lehmann Thomas and Thomas Malten. 1993. A Word Index for Cankam Literature. Madras: Instituteof Asian Studies.
  8. Subramoniam, V.I. 1962. Index of Purananuru. Trivandrum: Uinversity of Kerala.
  9. Zgusta, L., 1971. Manual of Lexicography, Mouton: The Hague.

0 comments:

Post a Comment